புது வரவு

பழமை

இளமை

இனிமை

புதுமை

Friday 18 April 2014

இரட்டை பீன்ஸ் பட்டாணி சுவைத்ததுண்டா ?

இன்றைய காலத்தில் இரவு உணவாக சப்பாத்தியை தான் அனைவரும் பரிந்துரைக்கிறார்கள். சப்பாத்தி செய்வதை சுலபமாக கற்று கொண்டாலும், அதற்கு ஏற்றவாறு தினம் ஒரு சைடு டிஷ் செய்வது , அப்பாப்பா ... மிக கடினமான காரியம். குருமா, டால், உருளை மசாலாவுடன் சாப்பிடுவதும் அலுத்துப் போய் விடுகிறது. சப்பாத்தியுடன் சுவைக்க ஒரு சத்தான குருமா செய்வதை இன்று கற்றுக் கொள்வோம்.  

ஆங்கிலத்தில் டபுள் பீன்ஸ் என்று அழைக்கப்படும் இரட்டை பீன்ஸ் உபயோகித்து ஒரு அசத்தலான குருமா செய்யலாம் வாங்க !

குறிப்பு : இரட்டை பீன்ஸ், ராஜ்மா என்னும் கிட்னி பீன்ஸ், அல்லது மொச்சை கொட்டை, இவை மூன்றில் ஒன்றை உபயோகித்து இந்த குருமா செய்யலாம்.

செய்முறை விளக்கம் :
1) பச்சை பட்டாணியுடன் சம அளவு பீன்ஸ் வகையை கழுவி வைத்துக் கொள்ளவும். நீங்கள் காய வைத்த பீன்ஸ் வகையைத் தேர்ந்தெடுத்தால், அவற்றை எட்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். ( படம் – அ )

படம் - அ ( Double Beans and Sprouted Peas )  
2) ஒரு பெரிய வெங்காயத்தை சன்னமாக நறுக்கிக் கொள்ளவும்.

3) ஒரு இன்ச் அகல இஞ்சி துண்டு, மூன்று பூண்டு பற்கள், 2 கிராம்பு, 1 இன்ச் நீள பட்டைத் துண்டு ஆகியவற்றை சேர்த்து ஒரு பசை தயாரித்துக் கொள்ளவும்.

4) மூன்று பழுத்த நடுத்தர அளவுள்ள தக்காளிகளை அரைத்து, வடிகட்டி சாறை தனியே வைக்கவும்

5) அரை மூடி தேங்காயை துருவி கெட்டி பால் எடுக்கவும்
பார்க்க ( படம் – ஆ )

படம் - ஆ (1) Chopped Onion (2) Ginger Garlic Paste with spices
(3) Tomato Puree and (4) Coconut Milk
 6) ஒரு அடி கனமான பாத்திரம் அல்லது ப்ரெஷர் பானில், எண்ணையில் கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

7) இதனுடன் அரை தேக்கரண்டி காய்ந்த வெந்தயக் கீரை அல்லது கசூரி மேத்தியை சேர்த்து வதக்கவும். பார்க்க ( படம் – இ ).

படம் - இ ( Kasoori Methi Or Dried FenuGreek Leaves )

8) கலவை பொன்னிறமானதும், இஞ்சி பூண்டு பசை, தக்காளி சாறு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்,

9) பின்பு பட்டாணி பீன்ஸ் வகையை அதில் கொட்டி, ஒரு முறை பிரட்டி, தேவையான அளவு மஞ்சள் தூள்’, மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

10) ஒரு கப் நீர் ஊற்றி, மூடியிட்டு தணலை சிறிது குறைத்து கொதிக்க விடவும். ( படம் – ஈ ).

படம் - ஈ 
11) பட்டாணி பீன்ஸ் வெந்தவுடன், எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை கொதிக்க விட்டு, தேங்காய் பால் சேர்த்து கிளறி, உடனே அடுப்பை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் தேங்காய் பால் திரிந்து விடும். பத்து நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்

இதோ டபுள் பீன்ஸ் பட்டாணி குருமா ( Double Beans Peas Curry ) தயார் !

Chappathi served with Double Beans Peas Curry
and Amaranth  Leaves Stir Fry 

1 comment :

  1. சும்மா இருக்குற சங்க ஊதின கதையா...சமைக்க தெரியாத என்ன கூட...உங்கள் பதிவுகள்...சமைக்க தூண்டிவிடும் போல இருக்கு...ரொம்ப தெளிவா,இயல்பா சொல்றிங்க .........படங்களும்...ரொம்ப அருமை...வாழ்த்துக்கள்...

    ReplyDelete

 
Copyright © 2014 அரிதும் அறிவோம்
Powered byBlogger