புது வரவு

பழமை

இளமை

இனிமை

புதுமை

Friday 28 March 2014

பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து


கலைஞானி கமல்ஹாசன் அவர்கள், ஒரு திரைப்படத்தில் 'பழமொழி சொன்னா அனுபவிக்கணும், ஆராய கூடாது' என்று வசனம் பேசுவார். ஆனால் நாம், இந்த பகுதியில், சில பழமொழிகளை சொல்லிப் பார்த்து அனுபவிக்கவும் போகிறோம், ஆராயவும் போகிறோம்... ஆரம்பிக்கலாமா ?

பழமொழிகள் என்பவை பழைய தலைமுறையினர் நம் நல்வாழ்வுக்கு விட்டுச் சென்ற அனுபவக் கூற்றாகும். பழங்காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட அனுபவ முதிர்ச்சியினால் தோன்றிய இந்த பழமொழிகள், ஒரு சமுதாயத்தில் நீண்ட காலமாக புழக்கத்தில் இருந்து, பிறகு காலம் மாற மாற, அதன் அர்த்தங்களும் திரிந்து மருவி, வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவ்வாறு உருமாறி இருக்கும் ஒரு பழமொழியை இங்கே அலசலாம்.

" பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து"


இன்றையப் பொருள் :
"பந்திக்கு முந்து" என்றால் சாப்பாட்டிற்கு முந்திச் சென்று சாப்பிட்டுவிட வேண்டும். கடைசியில் சென்றால் சில வகைப் பதார்த்தங்கள் கிடைக்காது என்பதனால், பந்திக்கு முந்தவேண்டும் எனது கொள்கின்றனர். 

"படைக்குப் பிந்து" என்றால் சண்டை சச்சரவுகள் ஏற்படும் பொழுது மற்றவர்களை முன் நிறுத்திவிட்டு, நாம் பிந்திச் சென்று விடவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா ? ஆனால் இதுவே உண்மையல்ல. 

உண்மைப் பொருள் :
உண்மையில் அக்காலத்தில் காலாட்படையின் ஒரு பிரிவுக்கு " பந்திப்படை " என்று பெயர். போர் நடக்கும் காலத்தில் பந்திப்படையை முன்னே செல்ல விட்டுவிட்டு, பயங்கர ஆயுதங்களைக் கொண்ட படைகளை பந்திப்படைக்கு பிந்தி செல்ல வைத்து போரை முறையாக நடத்த வேண்டும் என்பதைக் குறிக்கும் பழமொழி. 

ஆக நாம் எதிராளியிடம் சண்டையிடும்போதும்கூட அதில் ஒரு ஒழுங்கு முறை 
இருக்க வேண்டும் என்பதை விளக்கும் மிக அருமையான பழமொழி ஆகும். இப்பழமொழிக்கு வேறு ஒரு விளக்கமும் வழக்கத்தில் உள்ளது.


பந்தியில் சாப்பிடுவதற்கு நம் வலது கை முந்தும். படைக்கு செல்லும் சமயத்தில் நம் வலது கை நாணைப் பின்னோக்கி இழுத்து அம்பை எய்யும். எவ்வளவு தூரம் பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அந்த அளவிற்கு அம்பு வேகமாகச் சென்று எதிரியை தாக்கும் என்பதால் , வலது கை  பந்திக்கு முந்தும். படைக்குப் பிந்தும் என்று சொல்கின்றார்கள். இதுவே நாளடைவில் உருமாறி "பந்திக்கு முந்து, படைக்கு பிந்து" என்று உருவாகிவிட்டது என்றும் சிலர் கூறுகின்றனர்.


8 comments :

  1. பிறருக்கு உணவிடுகையில் நம் கை முந்த வேண்டும், போர்களத்தில் வில்லின் நாண் இழுக்கும்போது நம் கை பிந்தவேண்டும் என்ற அறிவுரை தான் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என மருவி வந்துள்ளது....நல்ல தகவல்..அருமை....பல்வேறு பழமொழிகள் இவ்வாறு வந்தவை தான்.

    மகாபாரத போருக்கு முன்பு பாண்டவர்களும் கௌரவர்களும் தத்தம் அணிக்கு படை பலம் சேர்க்க முற்பட்ட போது, நாட்டின் பொது மக்களையும் படையில் சேருமாறு அழைப்பு விடுத்தார்களாம். அப்போது ஒரு சாமானியன் "எந்த போரிலும் அரசர்களுக்கு முன்னர் எம்மை போன்ற மக்கள் தான் முதலில் எதிரியின் அம்புக்கு இரையாவார்கள், இதில் யாருடன் சேர்ந்தாலும் எனக்கு சாவு நிச்சயம் தானே " என கூறிய கருத்து தான் பிற்பாடு மருவி " ஆறிலும் சாவு ( கண்ணனை சேர்த்து பாண்டவர்கள் ) நூறிலும் சாவு ( கௌரவர்கள் ) என வழக்கத்தில் வந்தது

    ReplyDelete
    Replies
    1. அருமையாகச் சொன்னீர்கள்.... மேலும் ஒரு பழ மொழியை பற்றி தெரிந்து கொண்டோம் :)

      வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி ! Rajesh1972

      Delete
  2. பந்திக்கு போறதே இப்போ எல்லாம் படைக்கு போற மாதிரி தான் இருக்கு ..அதனால..நான் பந்திக்கும் முந்துறது இல்ல..படைக்கும் முந்துறது இல்ல..பழமொழியின்...உண்மையான..கருத்தை உணர வைத்ததற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த பழமொழிகள் எல்லாம் நாம் சிறு வயது முதலே கேள்வி பட்டு இருக்கிறோம். இதை பற்றி தெரிந்தவர்கள் பகிருவோம். தெரியாதவர்கள் பயன் பெறட்டும்

      மிக்க நன்றி Pannneerselvam Selvaa

      Delete
  3. Awesome website

    ReplyDelete
    Replies
    1. Welcome and thanks for your like Sajinipriya !

      Delete
  4. "பந்திக்கு முந்து படைக்கு பிந்து"
    இந்த பழமொழியின் உண்மை நிலையை காண்போம்.
    (தயவு செய்து கடைசி வரை படிக்கவும். விளக்கங்களின் source அதனதன் கீழேயே தரப்பட்டுள்ளது)
    விளக்கம் #1
    பந்தி என்று சொல்லப்படுகிற விருந்துகளுக்கு முந்திக்கொண்டு செல்ல வேண்டும் இல்லையென்றால் நமக்கு எதுவும் கிடைக்காது.பிறகு போர்களுக்கு போகும் பொழுது பின்னாடி தான் செல்ல வேண்டும் அப்பொழுது தான் நாம் காயம் படாமல் தப்பிக்கலாம்.வீரத்தில் சிறந்த நம் மூதாதையர் இப்படியா சொல்லி இருப்பார்கள்.
    ------------
    விளக்கம் #2
    பந்திக்கு முந்து என்றால் விருந்துகளில் நம்மைப்போன்று அதிகமான ஆட்கள் வந்து இருப்பார்கள்.அவர்களுக்கும் நல்ல பசி இருக்கும்.ஆகவே நாம் அதிக நேரம் பந்தியிற் அமர்ந்து சாப்பிடாமல் முந்தி எழுந்து அடுத்தவர் சாப்பிட இடம் கொடுக்க வேண்டும்.ஆகவே பந்தியில் முந்தி எழுந்திரு என்பதே சரியானது.படைக்கு பிந்து என்றால் நாம் எதிரியிடம் சண்டையிடும் பொழுது நமது தாய் நாட்டுக்காக நம் உயிரையும் கொடுத்து போர் புரிய வேண்டும்.நமது படையில் அனைவரும் மடிந்தாலும் வீரமுடன் கடைசி வரை போரிட வேண்டும்.
    http://sasipaarvai.blogspot.co.uk/2010/06/blog-post_21.html?m=1
    -------------
    விளக்கம் #3
    பந்திக்கு முந்து; படைக்கு பிந்து என்பது பழமொழியே அல்ல. அது ஒரு விடுகதை. பந்திக்கு முந்தும்; படைக்குப் பிந்தும்; அது என்ன? என்று கேட்பது அக்காலத்தில் வழக்கம்.
    "அந்த விடுகதைக்கு விடை, வலது கை என்பதாகும். பந்தியில் சாப்பிட உட்காரும் போது, நம் வலது கைதான் முந்தி உணவை எடுக்கும்.
    "வில்லேந்தி போருக்குச் செல்லும் போது, அதே வலது கை, எவ்வளவுக்கெவ்வளவு பின் செல்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு, அம்பானது வேகமாகச் செல்லும்.
    "இந்த விடுகதையே நாளடைவில் சிதைந்து, தமிழ்நாட்டை இழிவுப்படுத்தும் பழமொழியாக உருவெடுத்து விட்டது !!!
    http://manakkalayyampet.blogspot.co.uk/2013/06/blog-post_4030.html?m=1
    --------------
    விளக்கம் #4
    பந்திக்கு முந்து என்றால் ஒரு விருந்தில் முதல் பந்தி முக்கியமான, மதிப்பிற்குரியவரிகளுக்கே அளிக்கப்படும் , எனவே நீ அவ்வாறு சிறப்பு மிக்கவனாக இருக்க வேண்டும். அதேவேளை படைக்குப் பிந்து என்றால் எப்போதும் பெரிய படைத்தலைவர்கள் கடைசியாக தங்களை துருப்புச் சீட்டாகவைத்து போருக்குச் செல்வார்கள் . அதுபோல் நீயும் பெரியவனாய் இரு என்பது இதன் பொருள். எனவே இந்தப் பழமொழியின் கரு என்ன என்று பார்த்தால் எங்கும் சிறப்பிற்குரியராகவும், மதிப்பிற்குரியவராகவும் இரு என்பதாகும்.
    http://www.sivanyonline.com/2012/07/blog-post.html?m=1
    ------------
    விளக்கம் #5
    "பந்திக்கு முந்து படைக்கு பிந்து பந்தி எண்பது வரிசை . படை எண்பது நால்வகைப் படைகள்.ஒரு அரசனும் படையெடுத்து செல்லும் போது தேர்ப்படை, யானைப்படை ,குதிரைப்படை ,காலாட்படை நிற்கும் . போர் முரசு கேட்டவுடன் வீரர்கள் தத்தம் இல்லங்களில் இருந்து ஓடிவந்து பந்தியில் நிற்பார்கள் . அதாவது வரிசையில் நிற்க முந்து (பந்திக்கு முந்து ) ஆனால் படையில் காலாட்படை கடைசியாகத் தான் செல்ல வேண்டும் அது தான் போர் முறை ..அதானால் படைக்கு பிந்து'
    ---------------
    விளக்கம் #6
    "பந்திக்கு முந்து படைக்கு பிந்து" இதன் உண்மையான அர்த்தம் பந்திக்கு முந்து என்பது , கல்யாண வீட்டில் அல்லது பிறருக்கு உணவு பரிமாறும் போது நம்முடைய கை, உணவு உண்பவர்க்கு அதிக அளவு வழங்க (கை நீள வேண்டும்) அது விருந்தினரை சிறப்பாக கவனிப்பதை குறிக்கிறது. படைக்கு பிந்து என்பது போரில் வேல் , வாள், அம்பு, போற ஆயுதங்களை சிறப்பாக வீச நம் கையை எவ்வளவு பின்தங்க செய்கிறோமோ அந்த அளவு சக்தி, வீரியம் , பலம் கிடைக்கும் (ஒருவர் எந்த அளவு கையை பின்னோக்கி வளைத்து ஒரு பொருளை வீசுகிறாரோ அந்த அளவு வேகம் அப்பொருளுக்கு கிடைக்கும்) .அதனால் போரில் எளிதாக வெற்றி பெறலாம்...இது தமிழரின் ஈகை குணமும் போர் குணத்தையும் அறியலாம் ......
    http://lord.activeboard.com/t45510195/topic-45510195/
    -------------
    விளக்கம் #7
    இப்பழமொழியை 'பந்திக்கு முன் தீ படைக்குப் பின் தீ' என சற்றே மாற்றிக் கொண்டு பின்வருமாறு விளக்கம் கூறுகின்றனர்: பந்தியில் உணவு இடுவதற்கு முன்னால் தீயிட்டு உணவு சமைப்பர். படைகொண்டு போரில் வென்ற பின்னர் எதிரியின் நாட்டை தீயிட்டு அழிப்பர்.
    ------------
    விளக்கம் #8
    இங்கே பந்தித்தல் என்றால் திருமணம் செய்தலைக் குறிக்கும். படைத்தல் என்றால் குழந்தை பெற்றுக் கொள்ளுதலைக் குறிக்கும். ஆக இப் பழமொழியின் இன்னொரு கோண விளக்கமானது ' திருமணம் செய்துகொள்வதை தள்ளிப் போடக்கூடாது. ஆனால் குழந்தை பேற்றினை சற்று தள்ளிப் போடவேண்டும்.' என்பதாகும்.
    http://thiruththam.blogspot.co.uk/2010/10/blog-post.html?m=1
    -----------------
    ஐயோ ராமா.. இப்போ வலது கை எது இடது கை எதுன்னே மறந்துபோச்சே.. ஆணியே புடுங்க வேண்டாம். நான் பந்திக்கே போகலை இனி.
    ‪#‎எகொசஇ‬

    ReplyDelete
    Replies
    1. அருமையான விளக்கங்கள் செந்தில் அசோக் குமார்.

      பழ மொழி என்பது பழைய காலத்தில் மக்கள் கூறிய அனுபவ கூற்றுக்களாகும். இந்த பழமொழிக்கு இது தான் அர்த்தமாக இருக்குமோ என்று ஒரு யூகம் தான் மேற்கூறிய விளக்கங்கள். இதற்கும் ஏதும் ஆதாரங்கள் இல்லை.

      இருந்தாலும், நிறைய கோணத்தில் இந்த விஷயத்தைப் பற்றி கற்று கொண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி :)

      Delete

 
Copyright © 2014 அரிதும் அறிவோம்
Powered byBlogger