புது வரவு

பழமை

இளமை

இனிமை

புதுமை

Sunday 25 May 2014

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்


இன்று நாம் அறிந்து கொள்ளப் போகும் பழமொழியானது 

" அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார் "

நாம் அறிந்த விளக்கம் :
ஒரு மனிதன் அடித்தால் தான், அவன் உண்மையைச் சொல்லுவான் என்று நம்புகிறார்கள் பலர். பல சந்தர்ப்பங்களில் பெரியவர்கள், இப்பழமொழியை முன்னோடியாகக் கொண்டு குழந்தைகளை பின்னி எடுக்கின்றனர். வன்முறை மட்டுமே சில சமயங்களில் பயனளிக்கக் கூடும். அண்ணன் தம்பி கூட உதவாத பல தருணங்களில் வன்முறை நமக்கு நிச்சயமாக உதவும் என்று தவறாக அர்த்தம் புரிந்து கொண்டு, இன்றும் இப்பழமொழிக்கு அவ்வாறே விளக்கம் கொடுக்கின்றனர். 


நாம் அறியாத விளக்கம் :
உண்மை அதுவல்ல. அடி என்பது இறைவனின் திருவடி. துன்பம் ஏற்படும் போது இறைவனே கதி என்று அவன் திருவடியை பற்றினால், அண்ணன், தம்பி, உற்றார், உறவினர் எவர் உதவியையும் எதிர் நோக்கத் தேவை இருக்காது என்பதை உணர்த்தவே 'அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்' என்று கூறியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். 


ஆகவே, இறைவனின் திருவடியை நம்பு, மற்றவரை நம்பாதே என்றும் பொருள் கொள்ளலாம். இதையே " பற்றுக பற்றற்றான் பாதந்தனை" என்றும் ஒரு ஞானி கூறியிருக்கிறார். ஆக இறைவன் அருள் உதவுவது போல யாரும் உதவ முடியாது என்பதை உணர்த்தும் மிக அருமையான பழமொழி இதுவாகும்.

Thursday 1 May 2014

வா முனிம்மா வா.....!!!!

மிகப் பெரிய புகழ் பெற்ற மருத்துவமனை அது. ஒரு குறிப்பிட்ட ICU பிரிவு படுக்கையில் அனுமதிக்கப்படும் எல்லா நோயாளிகளும், சரியாக ஒவ்வொரு ஞாயிற்றுகிழமை 11 மணிக்கு சொல்லி வைத்தது போல் மரணம் அடைந்தார்கள். புற்று நோயாக இருந்தாலும், பக்கவாதமாக இருந்தாலும், எந்த நோயுடன் அந்த படுக்கையில் அனுமதிக்கப்பட்டாலும் அனைவரும் அதே நேரம், அதே கிழமையில் இறந்து போனார்கள்.

இதைக் கண்ட மருத்துவர்கள் இது எதேனும் பேய் பிசாசு அல்லது நமக்கும் மீறிய சக்தியால் தான்  நடக்கின்றது என்ற முடிவுக்கே தள்ளப்பட்டார்கள். 


சொல்லிவைத்தாற்போல் தொடர்ச்சியாக பத்து மரணங்கள் அதே படுக்கையில் அதே நேரத்தில் நிகழ்ந்து விட்டன. இதனால் பீதி அடைந்த மருத்துவர்கள் இதன் காரணத்தை ஆராய அடுத்த ஞாயிறு 11 மணிக்கு சில நிமிடங்கள் முன்னர் அந்த குறிப்பிட்ட படுக்கையை சுற்றி நின்று கவனிக்க தொடங்கினார்கள்.

நோயாளி அமைதியாக உறங்கி கொண்டு இருந்தார். அவர் உறக்கத்தை கலைக்காமல் ஒருவருக்கொருவர் செய்கைகளில் பேசிக்கொண்டு, நடக்கும் துர்மரணத்தை பற்றி ஆழ்ந்த சிந்தனையுடனும் கவலையுடனும் காணப்பட்டார்கள்.

மிகச்சரியாக 11 மணிக்கு அந்த அறைக்கு வந்த முனியம்மா ( பகுதி நேர துப்புரவு பணியாளர்) தன் முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டு, படுக்கையின் அருகே உள்ள செயற்கை சுவாச இயந்திரத்தின் மின் இணைப்பை எடுத்து விட்டு, தன் செல்போனின் சார்ஜரை அந்த இணைப்பில் சொருகிவிட்டு மீண்டும் தன் துப்புரவு பணியை மும்முரமாக செய்ய தொடங்கினார்.

இதை கவனித்த அத்தனை மருத்துவர்களின் மயக்கத்தின் காரணத்தை சொல்லத்தான் வேண்டுமா நண்பர்களே !!!



மூட நம்பிக்கைகள் நம் சமூகத்தை தொன்றுதொட்டு பாதித்து கொண்டு இருக்கின்றன என்பதை நாம் நன்கு அறிவோம். நமக்கு மூத்தவர்களும், முன்னோர்களும் மட்டுமே இதற்கு பொறுப்பல்ல, ஏனென்றால் சமகாலத்திலும் ஆய்ந்து அறியாமல் பல விஷயங்களில் நாம் தவறான முடிவெடுக்கிறோம். இவ்வாறு ஆராயாமல் முடிவெடுத்து விட்டு பின்னர் அதற்காக வருத்தமும் அடைகிறோம். தீர ஆராயாமல் எடுக்கப்படும் முடிவுகள் எப்போதும் தவறான முடிவுகளாகவே இருக்கின்றன.


கல்வி தரும் சிந்தனையை விட பகுத்தறிவு தரும் செயல்பாடுகள் எப்போதுமே உயர்வுதான்.

Monday 28 April 2014

ஊறும் எறும்புகள், கூறும் கருத்துக்கள் !


வணக்கம் நண்பர்களே ! நம் பூமியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, அதாவது மனிதன் பிறந்த காலத்துக்கு முந்தைய காலத்தில் இருந்தே வாழும் ஒரு உயிரினத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா ?  இந்தச் சிறிய உயிரனங்கள், டினோசர்களுடன் வாழ்ந்தவை. மனிதன் போலவே எல்லாக் கண்டங்களிலும் தன் குடியிருப்பை நிறுவி வாழ்ந்து வருபவை. ஆம்,  நீங்கள் யூகித்தது சரி தான். எறும்புகளைப் பற்றிய அரிய தகவல்களை தான் இன்று நாம் அறிந்துக் கொள்ளப் போகிறோம். வாருங்கள் !


உலகில் மிக மேன்மையான பிறப்பு எதுவென்றால் மனித இனம் என்று தானே சொல்லுவோம் ? ஆனால், மனிதர்களை விட உன்னதமான பிறப்பு எறும்புகள் தான் என்று ஆராய்ச்சியாளர்கள் குண்டை தூக்கிப் போட்டு இருக்கிறார்கள். அதாவது, எறும்புகள் மனிதர்களைக் கூட தந்திரமாக வென்று விடும் அளவுக்கு கூரிய அறிவு படைத்ததாம். புத்திசாலி எறும்புகளான ஃபார்மிக்கா எறும்புகளால் 1 முதல் 60 வரையிலான எண்ணிக்கையை சுலபமாக எண்ண முடியுமாம். எறும்புகளின் வாழ்கை,  நடை, பாவனைகள் எல்லாம் மனிதர்களை ஒத்து இருப்பதாக கண்டுப்பிடித்து இருக்கிறார்கள். மனிதன் ஒரு சமூக விலங்கு. அதை போலவே எறும்புகளும், கூட்டம் கூட்டமாக குடியிருப்புகள் அமைத்து வாழும் தன்மை உடையவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

Types of Ants
எறும்புகள் தங்கள் எடையை விட 50 மடங்கு எடையை சுமந்து செல்லும் ஆற்றல் உடையவை.  இது எவ்வாறு சாத்தியம் ஆகிறது என்றால், இவைகளின் தசைகள் மனிதர்களின் தசைகளை விட இறுக்கமானவை ஆகும். சில எறும்பு வகைகளில் போர் செய்யும் எறும்புகள், தங்கள் தலைகளை புற்றின் வாயிலில் அடைத்து வைத்து எதிரிகள் வராமல் கடமை ஆற்றும். 

சில வகை செடி தண்டுகளில் வெற்றிடம் இருக்கும். அங்கே குடி இருக்கும் எறும்புகள் செடிகளின் சாற்றை உண்டு வாழ்வதோடு மட்டுமல்லாமல், அதற்கு நன்றி கடனாக அந்தச் செடிகளை புழு, பூச்சிகள் அண்டாமல் காக்கவும் செய்கிறது.

இந்த பூமியில் உள்ள எறும்புகளின் மொத்த எடை எவ்வளவு தெரியுமா ?  இதில் வாழும் அனைத்து மனிதர்களின் எடைக்குச் சமமாகும். அதாவது, இந்த புவியில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் நிகராக, பதினைந்து லட்சம் எறும்புகள் வாழ்கிறதாம். வியப்பாக இருக்கிறது அல்லவா  

மனிதர்களை போலவே உயர் நிலையில் உள்ள சில எறும்புகள் தங்களை விட பலம் குறைந்த எறும்புகளை அடிமையாக்கி வேலை வாங்குமாம்.

Soldier Ants Vs Worker Ants

அதெல்லாம் இருக்கட்டும், எறும்புகள் எப்படி ஒரே நேர்கோட்டில் போகிறது  என்று பல முறை ஆச்சரியப்பட்டு இருக்கிறோம் அல்லவா ? முதலில் Scout Ant  எனப்படும் ‘சாரணர் எறும்பு’ உணவை தேடி அங்கும்,  இங்கும் அலையுமாம். அது உணவை கண்ட பின் பாதி உண்டு, ஒரு நேர்கோட்டில் தன் குடியிருப்பை நோக்கி திரும்பும். அப்படித் திரும்பும்போது ஃபெரோமோன் ( Pheromone ) என்ற ஒரு நறுமணத்தை பீச்சி கொண்டே செல்லுமாம். இதை மோப்பம் பிடித்து தான் மற்ற எறும்புகள் உணவு சேகரிக்கின்றன. 

அந்த நறுமணத்தை நீர் அல்லது வேறு ஏதேனும் தடை செய்யுமாயின், எறும்புகள் எல்லாம் திருவிழாவில் காணமல் போன குழந்தைகளைப் போல் அங்கும் இங்கும் ஓடுகின்றன. 

Scout Ant's Trail 

எறும்புகளிடம் இருந்து மனிதர்களாகிய நாம் கற்றுக் கொள்ள வேண்டியது,  போட்டிப் பொறாமை இல்லாமல் கூட்டு முயற்சியுடன் செயலாற்றும் உயரிய பண்பு என்று சொன்னால் மிகையாகாது.

Team Work !

Tuesday 22 April 2014

கூகுளைப் பற்றி கூகிள் செய்தால் ?

நூலகங்களை நாடிச் சென்று, புத்தகங்களை தேடி படித்து, உலக அறிவை பெருக்கிய காலம் மலையேறி விட்டது. பல நூறு நூலகங்கள் ஒரு வினாடி சொடுக்குதலில் நம் கை வசம் வந்து சேர்ந்துவிடும் விந்தை நடக்கும் அளவுக்கு, நம் உலகம் முன்னேறி உள்ளதை கண்டால் வியப்பாய் தான் இருக்கிறது.

நூலகங்களை முன்னோடியாக கொண்டு அதே கருத்தில் உருவாக்கப் பட்ட கூகுள் என்ற தேடல் பொறி இல்லாமல் இணையத்தில் உலாவுவது நம்மால் இயலாத காரியம் என்றாகிவிட்டது. வாருங்கள் நண்பர்களே, இன்று கூகுளை பற்றி சில அரிய தகவல்களை தெரிந்து கொள்வோம்
 
Google Doodle !

இந்த கூகுள் பிறந்த கதை மிகவும் சுவாரசியமானது. 1996 ஆம் ஆண்டு, லேரி பேஜ், செர்ஜி ப்ரின் என்ற இரண்டு ஸ்டான்போர்ட் பல்கலைகழக மாணவர்கள், தங்கள் பி.ஹெச்.டி பட்ட படிப்பிற்காக ஆராய்ச்சி தலைப்பாக இந்த தேடல் பொறி தொழில் நுட்பத்தை உருவாக்கினார்கள். இவர்கள் முதலில் கோகோல்.காம் ( gogol.com ) என்ற பெயரை தான் தேர்ந்தெடுத்தார்கள். இந்த கோகோல் என்பதற்கு என்ன அர்த்தம் ? ஒன்று என்ற எண்ணை தொடர்ந்து நூறு பூஜ்யங்களை போட்டால் என்ன விடையாக வருமோ, அது தான் கோகோல். அதாவது, எண்ணிலடங்கா இணைய பக்கங்களை தேடும் தளம் என்ற எண்ணத்துடன் பெயர் சூட்டினார்கள். ஆனால் பதிவு செய்யும் பொழுது இவர்கள் பிழையாக கூகிள்.காம் ( google.com ) என்று பதிவு செய்து விட்டார்கள்.

Larry Page and Sergy Brin

1990-களில் இணைய உலகில் கோலோச்சிய ask.com என்ற தேடல்பொறியை சொந்தம் கொண்டாடிய எக்சைட் (Excite) என்ற நிறுவனத்தை அணுகி, கூகுளை ஒரு மில்லியன் டாலர்க்கு விற்க முயன்றனர். எக்சைட் நிறுவன தலைவரான, ஜார்ஜ் பெல் இவர்களை நிராகரித்தவுடன், மேலும் 2,50,000 டாலர் விலையை குறைத்து விற்க முயன்றனர். அதிலும் தோல்வியை தழுவியதால், தாங்களே அதை நடத்த முனைந்தனர்.

இன்று இந்த கூகிள் வலைதளத்திற்கு, நாள் ஒன்றுக்கு 620 மில்லியன் மக்கள் வருகிறார்கள். கூகுள் ப்ளெக்ஸ்என்ற தலைமை செயலகத்தில் 2668 பொறியாளர்கள் வேலை செய்கிறார்கள். நாள் ஒன்றுக்கு ஒரு பில்லியனுக்கும் மேலான தேடல்களை கை ஆளும் கூகிள் 24 பெட்டா பைட் அளவுக்கு தகவல்களை சேமிக்கிறது. 25000 இணைய பக்கங்களின் குறிப்புகளைக் கொண்டு தொடங்கப் பட்ட கூகிள், அசுர வளர்ச்சி அடைந்து தற்போது பல கோடிகளுக்கும் மேலான பக்கங்களின் சுட்டு வரிசை பதிவகமாக (INDEX) செயலாற்றுகிறது. தமிழ், இலத்தீன், உருது, க்ளிங்கோன் உள்ளிட்ட 88 உலக மொழிகளில் கூகுள் முகப்பு பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாசகர்கள் தங்கள் தாய் மொழியிலேயே தேடலைத் தொடரலாம் என்பது ஒரு வரப் பிரசாதம்.

Google Plex 

மற்றும் ஒரு விந்தையான தகவல். கூகுள் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை வாடகைக்கு அமர்த்துகிறது என்று சொன்னால் நகைப்பீர்கள் தானே ? ஏன் எதற்கு என்ற கேள்விகள் நம் மனதை துளைக்கும் தானே ?

நண்பர்களே, இது நகைப்பதற்குரிய விஷயம் அன்று. கூகிள் ப்ளெக்ஸ் தலைமையக தோட்டத்தில் உள்ள புல் மற்றும் களைகளை அகற்ற நவீன கருவிகளை இவர்கள் பயன்படுத்துவதில்லை. மாறாக, அதற்காகும் செலவுகளை கணிசமாக குறைக்கும் விதமாக "கலிஃபோர்னியா க்ரேசிங்" எனும் நிறுவனத்திடம் இருந்து 200 ஆடுகள், ஒரு மேய்ப்பர் மற்றும் தோட்ட முகப்புகளை பராமரிக்க ஒரு நபரை வாடகைக்கு அமர்த்துகிறார்கள். "எங்கள் தோட்டத்தில் கருவிகளின் இரைச்சலை விட இந்த ஆடுகள் மேயும் காட்சி மிகவும் அழகு" என்பது கூகிளின் கூற்று.

California Grazing Sheep On Google Plex lawns
நிலவில் லேசர் கதிர்களின் மூலம் கூகுள் என்று அச்சிட வேண்டும் என்ற இவர்களின் அடுத்த செயல்திட்டம் நிறைவேற வாழ்த்துவோம் !




Friday 18 April 2014

இரட்டை பீன்ஸ் பட்டாணி சுவைத்ததுண்டா ?

இன்றைய காலத்தில் இரவு உணவாக சப்பாத்தியை தான் அனைவரும் பரிந்துரைக்கிறார்கள். சப்பாத்தி செய்வதை சுலபமாக கற்று கொண்டாலும், அதற்கு ஏற்றவாறு தினம் ஒரு சைடு டிஷ் செய்வது , அப்பாப்பா ... மிக கடினமான காரியம். குருமா, டால், உருளை மசாலாவுடன் சாப்பிடுவதும் அலுத்துப் போய் விடுகிறது. சப்பாத்தியுடன் சுவைக்க ஒரு சத்தான குருமா செய்வதை இன்று கற்றுக் கொள்வோம்.  

ஆங்கிலத்தில் டபுள் பீன்ஸ் என்று அழைக்கப்படும் இரட்டை பீன்ஸ் உபயோகித்து ஒரு அசத்தலான குருமா செய்யலாம் வாங்க !

குறிப்பு : இரட்டை பீன்ஸ், ராஜ்மா என்னும் கிட்னி பீன்ஸ், அல்லது மொச்சை கொட்டை, இவை மூன்றில் ஒன்றை உபயோகித்து இந்த குருமா செய்யலாம்.

செய்முறை விளக்கம் :
1) பச்சை பட்டாணியுடன் சம அளவு பீன்ஸ் வகையை கழுவி வைத்துக் கொள்ளவும். நீங்கள் காய வைத்த பீன்ஸ் வகையைத் தேர்ந்தெடுத்தால், அவற்றை எட்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். ( படம் – அ )

படம் - அ ( Double Beans and Sprouted Peas )  
2) ஒரு பெரிய வெங்காயத்தை சன்னமாக நறுக்கிக் கொள்ளவும்.

3) ஒரு இன்ச் அகல இஞ்சி துண்டு, மூன்று பூண்டு பற்கள், 2 கிராம்பு, 1 இன்ச் நீள பட்டைத் துண்டு ஆகியவற்றை சேர்த்து ஒரு பசை தயாரித்துக் கொள்ளவும்.

4) மூன்று பழுத்த நடுத்தர அளவுள்ள தக்காளிகளை அரைத்து, வடிகட்டி சாறை தனியே வைக்கவும்

5) அரை மூடி தேங்காயை துருவி கெட்டி பால் எடுக்கவும்
பார்க்க ( படம் – ஆ )

படம் - ஆ (1) Chopped Onion (2) Ginger Garlic Paste with spices
(3) Tomato Puree and (4) Coconut Milk
 6) ஒரு அடி கனமான பாத்திரம் அல்லது ப்ரெஷர் பானில், எண்ணையில் கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

7) இதனுடன் அரை தேக்கரண்டி காய்ந்த வெந்தயக் கீரை அல்லது கசூரி மேத்தியை சேர்த்து வதக்கவும். பார்க்க ( படம் – இ ).

படம் - இ ( Kasoori Methi Or Dried FenuGreek Leaves )

8) கலவை பொன்னிறமானதும், இஞ்சி பூண்டு பசை, தக்காளி சாறு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்,

9) பின்பு பட்டாணி பீன்ஸ் வகையை அதில் கொட்டி, ஒரு முறை பிரட்டி, தேவையான அளவு மஞ்சள் தூள்’, மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

10) ஒரு கப் நீர் ஊற்றி, மூடியிட்டு தணலை சிறிது குறைத்து கொதிக்க விடவும். ( படம் – ஈ ).

படம் - ஈ 
11) பட்டாணி பீன்ஸ் வெந்தவுடன், எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை கொதிக்க விட்டு, தேங்காய் பால் சேர்த்து கிளறி, உடனே அடுப்பை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் தேங்காய் பால் திரிந்து விடும். பத்து நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்

இதோ டபுள் பீன்ஸ் பட்டாணி குருமா ( Double Beans Peas Curry ) தயார் !

Chappathi served with Double Beans Peas Curry
and Amaranth  Leaves Stir Fry 

Wednesday 9 April 2014

யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும்

சென்ற வாரம், பழமொழி ஒன்று காலத்திற்கு ஏற்றார் போல எவ்வாறு மருவி விட்டது என்பதை படித்து ரசித்தோம். அதை போலவே இப்பொழுதும் ஒரு பழமொழியை அலசி ஆராயலாமா ?

யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும்

இன்றைய பொருள் :
யானை போன்ற பலம் பொருந்தியவர்கள் ஒரு சில காலக் கட்டங்களில் வெற்றி பெற்றால்,   பூனையை போன்ற பலம் குறைந்தவர்களும் தகுந்த  நேரம் வரும் போது வெற்றி பெறுவார்கள். அதாவது, வலியோர்களுக்கு ஒரு காலம் வந்தால், எளியோர்களுக்கும் ஒரு காலம் வரும் என்பதே கருத்து. ஆனால், இது உண்மையான பொருள் இல்லை. இந்தப் பழமொழி உருமாறி இருக்கிறது


உண்மையான பொருள் :
ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும் என்பதே உண்மையான பழமொழி.


என்றால் ஆவினம். ஆவினம் என்றால் பசுக்கூட்டம் என்று பொருள். பசுவின் பாலில் இருந்து கிடைக்கக்கூடிய நெய்யை இளமைக் காலத்தில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பொலிவு ஏற்படும். 

பூ நெய் என்றால் பூவினால் கிடைக்கும் தேன். இந்தத் தேனை முதுமைக் காலத்தில் உட்கொண்டால் உடலுக்கு எந்தவிதமான தீங்குகளும் ஏற்படாது. இந்த கருத்தை உணர்த்தவே ' ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும்'  என்று கூறியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். ஆக,  இப்பழமொழியில் யானைக்கும், பூனைக்கும் சம்பந்தமில்லை என்பதையும் உணர்க.




Thursday 3 April 2014

வறுத்த கோழி சாப்பிடுவதால் ஞாபகமறதி நோயா ?


துரித உணவை அதிகம் விரும்பி சுவைப்பதில் அடிமை பட்டிருக்கும் தலைமுறையை சேர்ந்தவர்கள் நாம் எல்லோரும். இதனால் பல நோய்கள் ஏற்பட்டாலும், ஞாபகமறதி நோயும் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.


இதனால் வளரும் குழந்தைகள் பாதிக்கப்படுமே ? இது எப்படி சாத்தியம் ? அற்புதமாக சுவைக்கும் உணவு, எதனால் நோயை உண்டாக்குகிறது ?? இந்த கேள்விகளுக்கு விடை இதோ !

எவை தீங்கு விளைவிப்பவை ?
துரித உணவுகளில் நம் மனதை கவர்ந்தது ஃப்ரைட் சிக்கன் என்னும் வறுத்த கோழி வகை. இதை விரும்பி உண்ணும் நாம், இதனால் நம் உடலுக்கு ஏற்படும் உபாதைகளையும் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் அவசியம். இது ‘பிரவுனிங்’ என்ற முறையில் தயார் செய்த உணவு ஆகும். இந்த சமையல் முறையே தீங்கு விளைவிப்பதாகும்.


பிரவுனிங் முறை என்றால் என்ன ?
பிரவுனிங் என்றால். கோழி இறைச்சியில் பல்வேறு மசாலாக்களை தடவி, அதில் கொஞ்சம் சர்க்கரையையும் தடவி, வாணலியில் எண்ணெய் ஊற்றி பொரிப்பது ஆகும். இப்படி செய்யும் போது அந்த இறைச்சியில் உள்ள கொழுப்பும், அதில் தடவப்பட்டிருக்கும் சர்க்கரையும் சேர்ந்து, இறைச்சியை ஒரு விதான பழுப்பு நிறமாக மாற்றும். இந்த பழுப்பு நிறமே கூடுதல் சுவை அளிக்கக் கூடியது.



விளையும் வேதியியல் மாற்றம் :
இந்த பிரவுனிங் முறையில் இறைச்சியை சமைக்கும் போது, இறைச்சியில் இருக்கும் புரதச்சத்து அல்லது கொழுப்பு, சர்க்கரையுடன் சேர்ந்து எதிர் வினையாற்றி ‘அட்வான்ஸ்ட் க்ளைகேஷன் எண்ட்’ (Advanced Glycation End) அல்லது ஏ.ஜி.இ. என்ற வேதியியல் மாற்றம் உண்டாகிறது. இந்த ஏ.ஜி.இ. மாற்றம் ஏற்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் தான் பலவகையான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

குறிப்பாக சர்க்கரை நோய் உருவாவதற்கு முக்கிய காரணமான இந்த ஏ.ஜி.இ., தற்போது டிமென்ஷியா என்னும் ஞாபக சக்தி குறையையும் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர்.

Monday 31 March 2014

தந்தை பெரியாரின் தனித்துவம்


தந்தை பெரியாரின் தனித்துவம்

தமிழ் மக்கள் அனைவரின் அன்பையும் மதிப்பையும் பெற்றவர் தந்தை பெரியார் ஈ.வே.ரா என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவருக்கு இருந்த பல்வேறு தனித்தன்மைகளில் நம் மனதை கவர்ந்த ஒரு கொள்கையை இங்கே பகிர்கிறோம்.

"ஒழுக்கமாய், நாணயமாய், சுயநலமில்லாமல் உழைப்பதன் மூலம், எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அது வெற்றிக்கு வழியே ஆகும்."

"விதியை நம்பி மதியை இழக்காதே"

இத்தகைய பொன்மொழிகளை மக்களுக்கு அறிவுறுத்தியதோடு நில்லாமல், அவ்வாறே வாழ்ந்து காட்டியவர் இவர். 

Periyaar thoughts, Periyar

தந்தை பெரியார் மிகவும் சிக்கனமானவர். ஆடம்பரங்கள் அவருக்குப் பிடிக்காது. அதனால், அவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் மாலை மரியாதைகளை வேண்டாம் என்று கூறிவிடுவார். 

ஆனால், தன் எடைக்கு எடை தேவையான பொருட்களை பெற்றுக் கொள்வார். அவ்வாறு அவர் பல ஊர்களில் பெற்றுக் கொண்ட பொருட்களின் பட்டியல் இதோ !

காஞ்சீபுரம் >>> நெல் 
கோயம்பத்தூர் >>> தேங்காய் 
குளித்தலை >>> பெட்ரோல் 
குடியாத்தம் >>> கைத்தறி ஆடைகள் 

சிதம்பரம் >>> காபிக் கொட்டை
சிவகங்கை >>> உப்பு
செங்கம் >>> கிச்சிலி சம்பா அரிசி 

மதுரை >>> வெல்லம்

திருச்சி >>> பால்
தஞ்சாவூர் >>> வெள்ளிக் காசுகள் 

வட ஆற்காடு >>> வாழைப் பழங்கள்

பண்ருட்டி >>> பிஸ்கட் 
பாபநாசம் >>> கோதுமை,  அரிசி, சோளம், கேழ்வரகு, சர்க்கரை போன்ற பல வகைப் பொருட்கள் 
பெங்களூர் >>> காய்கறிகள் 
பெரம்பலூர் >>> வெங்காயம் 

இதன் மூலம் என்ன தெரிகிறது ?

உழைக்கும் வர்க்க மக்களின் கஷ்ட நஷ்டங்களை புரிந்துக் கொண்டு, தனக்கான தேவைகளை அதற்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்ட பண்பு நிறைந்தவர். தந்தை பெரியாரின் பரந்த மனமும் சேவை குணமும் இதிலிருந்தே விளங்குகிறதல்லவா ?


 
Copyright © 2014 அரிதும் அறிவோம்
Powered byBlogger